இன்று காலை கல்ஹின்ன நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பலவாறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.இது முஸ்லிம்கள் மத்தியில் இடம்பெற்ற வர்த்தக ரீதியிலான அல்லது தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என்று பொலிஸ் தரப்பு அவசர அவசரமாக இரண்டு மணித்தியாலயங்களுக்குள் அறிக்கை விட்டிருக்கிறது.
காலை 8.40 நடந்த சம்பவத்தை 11.00 மணிக்கு முஸ்லிம்களுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவமாக காட்டுவதற்கு பொலிஸார் மிகவும் சிரத்தைக் கொண்டு செயற்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
பலத்த சந்தேகத்தை கிளப்பும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியொன்றோடு கொழும்பு மெயில் ருடே தொடர்பு கொண்டு விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞன் ஏதுமறியாத அப்பாவியென்றும் அவரை இந்த காரில் வந்தவர்கள் பலாத்காரமாக ஏற்றி வந்து இந்த கொலையை செய்து விட்டு அவரை நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள 'கபல்கஸ்தென்ன' என்ற சிங்கள மக்கள் வாழும் பகுதியில் இறக்கி விட்டு, காரிலிருந்த ரி 56 துப்பாக்கியையும் வெளியே எறிந்து விட்டு சென்றிருப்பதாகவும் அறிய வருகிறது.
இந்த சம்பவத்தைக் கண்ட சிங்கள மக்களால் குறித்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை வைத்து முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும், முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளேயே வன்முறைகளை இப்போது ஆரம்பித்திருப்பதாகவும் சிங்கள இனவாதிகள் முகப்புத்தக facebook பக்கங்களில் படங்களையும் கருத்துக்களையும் இட்டு வருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பான சிசிரிவி காட்சிகளைப் பார்க்கும் ஒருவருக்கு இந்தத் தாக்குதல் யாரையும் குறிவைத்து தாக்கும் நிகழ்வு ஒன்றல்ல என்பதையும், யாரையாவது தாக்க வேண்டும் என்ற நிலையில் இடம்பெற்றிருக்கும் சம்பவம் என்பதையும் புரியக் கூடியதாக இருக்கிறது.
0 Comments