Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம்கள் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - அ.இ.மு.லீ.வா.மு. தேசியத் தலைவர் லுக்மான் சஹாப்தீன்



( ஐ. ஏ. காதிர் கான் )

   ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்கள் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், முஸ்லிம்கள் பொறுப்புடன் நாட்டின் சட்டதிட்டங்களையும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி, அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என,  அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் இலங்கை வாழ் சகல  முஸ்லிம்களிடமும் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏனைய இன சகோதரர்கள் தங்களது  பெருநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடியதைப் போன்று நாமும் இந்த நோன்புப் பெருநாளை வீட்டிலேயே பொறுப்புடன் களிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

   அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் அனுப்பியுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

   உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் "கொவிட் 19" என்ற கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த எமது அரசாங்கம், உலக நாடுகளுக்கு முன்மாதிரியான நாடாகத் திகழ்கிறது. பல நாடுகள் இந்நோய்த் தாக்கத்தினால் செய்வதறியாது திண்டாடிக்  கொண்டிருக்கும் இவ்வேளையில், மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை விசேடமாகப் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

    தற்போது அரசினால் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவரப்பட்டாலும், நாட்டிலிருந்து முற்றாக  ஒழித்துக்கட்டப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

   ரமழான் நோன்பினை நோற்றிருக்கும் நாம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில், சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பேணி நடக்க வேண்டும். குறிப்பாக, முகக் கவசம் அணிந்து வெளியிடங்களுக்குச் செல்லும் அதேவேளை, சமூக இடைவெளியையும் கட்டாயம் பின்பற்றுமாறும், வியாபார நிலையங்கள் மற்றும் பணியிடங்களுக்குச் செல்வோர் கூட்டமாக ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும். 

   அவ்வாறே, பெருநாள் உடைகள் வாங்க வேண்டுமென்ற போர்வையில், பெண்களும் குழந்தைகளும் கடைத்தெருகளுக்குச் செல்வதையும் முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதுடன், இம்முறை எமது பெருநாளை சிக்கனமான முறையில் வீட்டிலேயே கொண்டாடுவதற்கு முயற்சி செய்யவும். இதேவேளை,  சிறியோர் மற்றும் வயது வந்தவர்களை வீட்டிலேயே இருக்க ஆவண செய்ய வேண்டும்.

   சிங்கள, தமிழ் மற்றும் கிறிஸ்தவ  சகோதரர்களின் விசேட நாட்களான புதுவருடப் பிறப்பு, உயிர்த்த  ஞாயிறு, வெசாக் பண்டிகை என்பன, இம்முறை அவர்களினால்  வீடுகளிலேயே கொண்டாடப்பட்ட சூழ்நிலையில், தற்சமயம்  இருக்கின்ற சிறந்த  உடைகளைக் கொண்டு நாமும் எமது பெருநாளைக் கொண்டாட திடசங்கட்பம் கொள்ள வேண்டும்.
   நாட்டின் இன ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் முஸ்லிம்கள் என்றும் பங்களிப்பு வழங்கினார்கள் என்பதை எமது சிறந்த செயற்பாட்டின் மூலமாக நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம்...! 

 நன்மக்கள் பெற்ற சமூகமாக வாழ்ந்து நன்மதிப்பைப் பெற என்றும் இறைவனைப் பிரார்த்திப்போம்...!!

Post a Comment

0 Comments