ஏ.எச்.எம். ஃபவுசி 2010 ஆம் ஆண்டில் பேரிடர் மேலாண்மை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் நெதர்லாந்து அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு ஆடம்பர ஜீப் வாகனத்தை தனிப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது தொடர்பாக இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் அமைச்சக நிதியில் ரூபாய் ஒரு மில்லியன் வரை செலவு செய்து அவர் அந்த வாகனத்தை பராமரித்து வந்திருக்கிறார் எனவும் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணையம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர் அந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பின்னர் மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையை விதித்தது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு விசாரணைக்கு வந்த நேரத்தில் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ஃபவுசிக்காக வழக்கறிஞர் ஒருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அவரது பெயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட வேளை முன்னாள் அமைச்சர் ஃபவுசியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இந்த மனு தொடர்பான நோட்டீஸ்களை அடுத்த நான்கு வாரங்களுக்குள் பிரதிவாதியான ஃபவுசிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் மனுதாரருக்கு உத்தரவிட்டது.
அதன்படி இந்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். ஃபவுசி, அவரது செயலாளராக பணியாற்றிய சித்தி மரீனா மொகமது உள்ளிட்ட 8 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அமைச்சராக இருந்த ஃபவுசி அவர்கள் அரசியலமைப்பை பாதுகாக்கும் பிரமாணம் செய்திருந்தாலும், இந்த செயல்மூலம் அவர் அந்த பிரமாணத்தை மீறியுள்ளார். மேலும் இதன் மூலம் அவர் நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் மேலும் கோரியுள்ளார்.
0 Comments