அமெரிக்காவில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசிய இந்திய மாணவிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
"கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது“ என்று எம்ஐடி மாணவி மேகா வெமுரி குரல் எழுப்பி வருகிறார்.
அமெரிக்காவின் அறிவுப் பெட்டகமாகத் திகழும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) கல்வி கற்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் தனது கருத்துக்களைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியதன் விளைவாக, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த சர்ச்சை, அவருக்குப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க எம்ஐடி நிர்வாகம் தடை விதித்ததன் மூலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தச் சம்பவம், கல்வி நிறுவனங்களில் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் குறித்த தீவிர விவாதத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கடந்த மே 29, 2025 அன்று, மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் கோலாகலமாக நடைபெற்ற ‘வன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழா நிகழ்ச்சியில், மாணவர்களின் பிரதிநிதியாக உரையாற்றும் பெருமை மேகா வெமுரிக்குக் கிடைத்தது.
அந்த மேடையை அவர், பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும், காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை கடுமையாக எதிர்க்கவும், குறிப்பாக இஸ்ரேல் பாலஸ்தீன் மக்கள் மீது தொடுக்கும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை "இனப்படுகொலை" என்று கடுமையாகக் கண்டித்துப் பேசவும் அந்த மேடையை பயன்படுத்திக்கொண்டார்.
அவரது உரை வெறும் கண்டனத்தோடு நின்றுவிடவில்லை. இஸ்ரேலுடன் எம்ஐடி போன்ற உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வைத்திருக்கும் தொடர்புகளைக் கடுமையாகச் சாடிய அவர், "குற்றமிழைக்கும் ஒரு நாட்டின் அமைப்புகளுடன் இத்தகைய கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பது மாபெரும் குற்றம்" என்று முழங்கினார்.
மேகா வெமுரியின் இந்தத் துணிச்சலான உரை நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே, பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிகழ்வு, மாணவர் சமூகத்திலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம், மேகா வெமுரி "நிகழ்ச்சி விதிமுறைகளை மீறியதாக" குற்றம் சாட்டு ஒன்றை வடிவமைத்துள்ளது. ஆனால், எந்தக் குறிப்பிட்ட விதிமுறைகளை அவர் மீறினார் என்பது குறித்துத் தெளிவாக அதில் விளக்கப்படவில்லை. இந்த “தெளிவின்மை” நிர்வாகத்தின் முடிவின் மீதான சந்தேகங்களை மேலும் வலுக்கச் செய்துள்ளது.
இந்தத் தடை குறித்து மேகா வெமுரி தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
"நான் எந்த விதியையும் மீறவில்லை. இது எனது கருத்துச் சுதந்திரத்தை அடக்கும் முயற்சி" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், "ஒரு கல்வி நிறுவனம், இனப்படுகொலைக்குத் துணைபோகும் ஒரு அரசுடன் கூட்டுச்சேர்வதை எதிர்க்கும் குரல்களை ஒருபோதும் அடக்க முடியாது" என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
இந்தச் சம்பவம், கல்வி நிறுவனங்களின் தார்மீகப் பொறுப்புகள், மாணவர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் உலகளாவிய அரசியல் நிகழ்வுகளுக்கு கல்விச் சமூகம் ஆற்ற வேண்டிய எதிர்வினைகள் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேகா வெமுரியின் போராட்டம், ஒரு தனிநபரின் போராட்டமாக மட்டுமல்லாமல், அண்மைக்காலமாக அநீதிக்கு எதிராக, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து எழுந்து வரும் ஓர் எழுச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
0 Comments