குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது.
இந்த பொப்பியுலர் ஃபோர்ஸஸின் தலைவர் யாஸிர் அபூ ஷபாப்!
சீஐஏ - மொசாட்டுக்கு மிகவும் பிரியமான “அபூ” என்ற அடைமொழியை வைத்தே இந்த அநியாயக் காரனை இஸ்ரேலிய ஊடகங்கள் போற்றிப் புகழ்கின்றன.
யாஸிர் அபூ ஷபாப் என்பவன், ஒரு முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரன். அதுமட்டுமல்லாமல், பல கிரிமினல் வேலைகளுக்கு சொந்தக்காரன். பலமுறை ஹமாஸினால் தண்டிக்கப்பட்டவன்.
பசியால் வாடிக்கொண்டிருக்கும், காஸா மக்களுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை இடைமறித்து, அபகரித்துச் செல்லும் “கொந்தராத்து“ வேலை இவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று, காஸாவின் தெற்கு ரஃபா எல்லையின் கட்டுப்பாடு, இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவத்தின் உதவியுடன் இவனது கைகளுக்கு சென்றிருக்கிறது.
யாஸிர் அபூ ஷபாபும் அவனது 300 பேர் கொண்ட கூலிப்படை கும்பலும், காஸாவுக்கு செல்லும் உணவு விநியோகத் திட்டத்தை இடைமறித்து தடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர்.
பட்டினியால் வாடும் மக்களுக்குச் செல்ல வேண்டிய உதவிப்பொருட்களை கொள்ளையிட்டு அதிக விலைக்கு இந்த கூலிப்படை விற்பனை செய்தும் வருகிறது.
பட்டினியால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த மக்கள் இந்த உதவிப் பொருட்களை பெற ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த போது, இந்த கூலிப்படை கண்மூடித்தனமாக பலரை சுட்டுக் கொன்றுள்ளது.
காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும், பொப்பியுலர் ஃபோர்ஸஸ் என்ற இந்த கூலிப்படைக்கு பூரண அனுசரணையை வழங்கி வருகின்றன.
காஸாவிற்கான உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை இந்த கூலிப்படை கொள்ளையடித்து வருகிறது.
உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன சங்கத்தின் தலைவர் நஹிதார் என்பவா் கூறுகையில், "யாஸிர் அபூ ஷபாபின் அடியாட்கள் டிரக்குகளைத் தடுத்து, டிரைவர்களை மிரட்டுகின்றனர். எதிர்ப்பு காட்டினால், வாகனத்தின் டயர்களை குண்டு வீசி சேதப்படுத்துகின்றனர் " என்று குற்றம் சாட்டுகிறார்.
ஐ.நா.வின் ஆவணங்களும், யாஸிர் அபூ ஷபாபை "மனிதாபிமான உதவிகளை முறையாக கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவர்" என்று வர்ணித்திருப்பதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"ஹமாஸை பலவீனப்படுத்த, காஸாவில் உருவாகும் மாற்று சக்திகளுக்கு நாங்கள் எங்கள் ஆதரவுகளை வழங்குவோம்!" என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு பகிரங்கமாக இந்த கூலிப்படை தொடர்பாக குறிப்பிட்டுள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன.
இந்த உத்தி இஸ்ரேலுக்கு புதிதல்ல. பாலஸ்தீனர்களைப் பிளவுபடுத்தி, ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதில் இஸ்ரேல் கடந்த காலங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல், இஸ்ரேலும் அமெரிக்காவும் மத்திய கிழக்கில் உணர்வுகள் மழுங்கிய ஒரு அரபு சமூகத்தை உருவாக்கி வெற்றியும் கண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டு ஆடல், பாடல், கூத்து, கும்மாளங்களில் அது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.
காஸாவில் வரலாறு காணாத அட்டகாசங்களை அரங்கேற்றி, ஐம்பதாயிரம் பேருக்கு அதிகமானோரை கொலை செய்து விட்டு, அந்த மக்களை பட்டினியால் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் உதவிப்பொருட்கள் விநியோகத்தில் அரங்கேற்றும் இந்த அரசியல் விளையாட்டு மற்றுமொரு மிகப் பெரிய மனித அவலத்தை அரங்கேற்ற போகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
அஸீஸ் நிஸாருத்தீன்
0 Comments