உலகில் 90 சதவீத மக்கள் மாசடைந்த காற்றைச் சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டு உலக சுகாதார நிறுவன பொதுசுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தலைவர் மரியா நெய்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காற்று மாசுபாடு மிகுந்த கவலைக்குரிய ஒன்று. வளர்ந்த நாடுகளை விட ஏழை நாடுகளில் காற்று மிகவும் அசுத்தமடைந்துள்ளது. ஆனால், காற்று மாசுபாடு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. காற்று மாசுபாடு நகரங்களில் அதிகம். கிராமங்களில் அதை விட மோசம். சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தவிர, கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதுடன், சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்.
உலகம் முழுவதும் 3,000 இடங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 92 சதவீத மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள காற்றின் தரம் உலக சுகாதார மையம் நிர்ணயித்த வரம்பை விட மோசமாக உள்ளது.
காற்றுமாசுபாடு காரணமாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீதம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் நிகழ்கின்றன.
தெற்காசியா, சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட மேற்கு பசிபிக் பிராந்தியங்களில் காற்றுமாசுபாடு மிக மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 Comments