மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், மஹிந்தவின் சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன வாக்குமூலம்அளித்துள்ளார்.
“2017ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, எனக்கு கார் ஒன்று வழங்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி என்னை அழைத்து, ராஜகிரியவில் உள்ள லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில் வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு எனக்குக் கூறினார்.
நான் லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்திற்கு சென்று காரின் சாவியைப் பெற்றுக் கொண்டேன். அந்த வாகனத்துக்கான ஒரு ஆண்டு காப்புறுதியும் எனக்கு வழங்கப்பட்டது.
நான் முன்னாள் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததால், அந்த கார் எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக நினைக்கிறேன். எனினும், அந்த கார் மிஹின் லங்கா நிறுவனத்துக்கு சொந்தமானது என்று எனக்குத் தெரியாது.
2007ம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரை, 8 ஆண்டுகள் இந்த வாகனத்தை நான் பயன்படுத்தினேன். மஹிந்த ராஜபக்ஷ 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அந்த வாகனத்தை , லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனம் மீளப் பெற்றுக் கொண்டது.” என்றும் சோதிடர் சுமணதாச சாட்சியம் அளித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களால், 26 கார்கள் லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில் பெறப்பட்டதாகவும், இவற்றுக்கான தவணைக் கொடுப்பனவுகளை மிகின் லங்கா நிறுவனமே செலுத்தியதாகவும் அறியவருகிறது.
0 Comments