Ticker

6/recent/ticker-posts

முன்னைய ரமழான் காலங்களைப் போன்று பகிரங்கமாக செயற்பட முடியாமைக்கு கவலையடைகின்றோம் - மனம் வருந்தும் பைஸர் முஸ்தபா


( ஐ. ஏ. காதிர் கான் )

   முன்னைய ரமழான் காலங்களைப்  போன்று இம்முறை ரமழானில் மார்க்கக் கடமைகளிலும், இதர வணக்க வழிபாடுகளிலும் பகிரங்கமாகச் செயற்பட முடியாமைக்கு கவலையடைகின்றோம் என்று, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  பைஸர் முஸ்தபா, தனது விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

   ரமழான்  இறுதிப்பத்தில் கொரோனா தொற்று இலங்கையிலிருந்து நீங்கப் பிரார்த்திக்குமாறும், 

வீடுகளில் இருந்தவாறே ஆன்மீக மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும், தனது விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

   அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
   அகில இலங்கை உலமா சபை, ஷரீஆக் கவுன்ஸில், தரீக்காக்களின் உயர் மன்றம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள்  ஆகியவற்றின் ஊடாக, எமக்கு அடிக்கடி விழிப்பூட்டல்கள்  வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றை நாம் அலட்சியம் செய்யாது மன நிறைவோடு பின்பற்றி ஒழுகவேண்டும்.

   ரமழானின் மீதமுள்ள நாட்களை அமைதியாகவும் சமாதானமாகவும் கழிக்குமாறும் குறிப்பாக, புனித "லைலத்துல் கத்ர்" இரவு மற்றும் "ஈதுல் பித்ர்" பெருநாள் போன்றவற்றை  வீடுகளில் இருந்தவாறே ஆன்மீக மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும்  வேண்டிக்கொள்கின்றேன்.

    நாட்டில் தற்போது  ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையில், முன்னைய காலங்களில் ரமழான் மாதத்தில் செயற்பட்ட முறையில் பகிரங்கமாகச் செயற்பட முடியாமல் கவலையடைந்து போயுள்ளோம்.

   அத்துடன், இந்தப் பேராபத்தான காலப்பகுதியில் அமல்களை நிறைவேற்றுவதற்காக வழமை போன்று பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாத நிலையும் எமக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை,  வழமையான பொதுப்பணிகளில் ஈடுபடுவதற்கும் முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

   எனவே நாம்  அனைவரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றை மிகப் பொறுமையோடு சகித்து வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
இலங்கை வக்ஃபு சபை, உலமா சபை, சுகாதார  மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியன எமது நன்மைக்காக வழங்குகின்ற வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து எம்மையும், எம் உறவுகளையும், நாட்டு மக்கள் அனைவரையும் இக் கொடிய கொரோனா  தொற்றிலிருந்து பாதுகாக்க முயற்சிப்போம்.

இதேசமயம், இப் புனித மாதத்தில்,  நல்லமல்களில் வீட்டிலிருந்தவாறே ஈடுபட்டு சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் இக் கொடிய நோயிலிருந்து இறைவன் நம்மைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டோரை விடுவிக்கவும் அன்றாடம் இறைவனிடம் கையேந்திப் பிரார்த்திப்போம்...!


Post a Comment

0 Comments