முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்து தற்போது தேர்தல் பிரச்சாரப் பணிகளிலும் ஈடபட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் அமைச்சர் பசீர் சேகுதாவுத் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
மக்கள் அபிப்பிராயத்தோடு இணங்கி கட்சியின் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்திருக்கும் அமைச்சர், தான் எவ்வகையிலும் ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் எனவும் அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களை பாதுகாப்பதில் மஹிந்த இருப்பதாக நம்பிக்கை வைப்பதாகவும் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா்.
உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த பஷீர் சேகுதாவூத் நேற்றைய தினம் அரசிலிருந்து வெளியேறினார். தாம் வெளியேறியமைக்கான காரணங்களை ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
தமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் முஸ்லீம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் ராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவே தாம் தமது அமைச்சுப் பதவியை ராஜீனாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர் நாட்டுப்பற்றுள்ள பிரசையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சரா இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையைிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீச் சேகுதாவூத் ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments