Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியல் முன்னணியை கைவிட்ட அரசியல் அனாதைகள்

முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட இன்று கட்சியை ஆரம்பிக்க முயற்சித்த அரசியல் அனாதைகளின் முன்னணி அதனை கைவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரையே அந்த இணையத்தளம் அரசியல் அனாதைகள் எனக் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது விசர் வேலை எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி அதற்கு இணங்கவில்லை.
இந்த நிலையில், புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளை கைவிட்டதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று தெரிவித்தார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உதய கம்மன்பில கூறியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இவர்களின் முயற்சிகள் எப்படி இருந்தாலும் தற்போதும் அரசாங்கத்திற்கு எதிரான முனைப்புகளில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரியது என கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை கலைத்து விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments