Ticker

6/recent/ticker-posts

நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க மஹிந்த விருப்பம் தெரிவிக்கவில்லை! சோபித தேரர்

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பில் நாம் பலமுறை வலியுறுத்தியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனைச் செய்யவில்லை என மாதுளுவாவே சோபித தேரோ தெரிவித்தார்.
நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக அடக்குமுறையே தலைதூக்கியிருந்தது. இப்போது நாட்டில் மக்கள் உணரக்கூடிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தில் இருக்கும் போது செய்ய முடியாததை இப்போது அதிகாரம் இல்லாத போது எவ்வாறு செய்ய முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இது நல்லாட்சிக்கான ஆரம்பம்தான் நிச்சயம் மாற்றம் உறுதியே என்றும் அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி தொடர்பிலும் கடந்த கால ஆட்சி பற்றியும் கருத்துத் தெரிவித்த
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கியிருந்தது. எம்மோடு அவர்களும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த போது நாம் எட்டுத் தடவைக்கு மேல் இதனை வலியுறுத்தினோம். அவர் அதற்கு இணங்கவில்லை. இப்போது அது பற்றி அவர் பேசி வருகிறார்.
அதிகாரத்தில் இருந்த போது முடியாததை அதிகாரம் இல்லாத போது எவ்வாறு நிறைவேற்ற முடியும்? மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டதையே அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு அவருக்கு போதியளவு சந்தர்ப்பங்கள் இருந்தன. அவர் அதனை செய்யவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், தேர்தல் முறைமாற்றம், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்றவை நல்லாட்சியின் முக்கிய விடயங்கள். அது ஆரம்பிக்கப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் முழுமையாக நிறைவேற்றப்படும். எவ்வாறெனினும் நல்லாட்சி மூலம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை மக்கள் உணரக் கூடியதாக உள்ளது.
இந்த நாட்டில் இரண்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள். தன்னிச்சையான செயற்பாடுகள் அடக்குமுறை இந்த நாட்டுக்குச் சரிவராது.
இப்போது மக்கள் கருத்துக்களை வெளியிட சுதந்திரமுள்ளது. எம்முடன் நல்லாட்சியில் 100ற்கும் அதிகமான கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. அவர்களின் கருத்துக்கள் பெறப்படுகின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பலமே முன்னிறுத்தப்பட வேண்டும். நாட்டில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் அடக்குமுறையும் ஒன்றல்ல. சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப லீகுவாங்யூ சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தினார். அதன் மூலம் அபிவிருத்தியை மேற்கொண்டார்.
இலங்கையில் பாதாள உலகக் குழு போன்றவை சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒழிக்கப்பட வேண்டியவை.
இலங்கையைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு அடக்குமுறையே தொடர்ந்தது.
இப்போது பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள் தேர்தலில் வெளிப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக தேர்தல் காலங்களில் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் பாதாள உலகக் குழுவை தமக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
இன்றுள்ள தேர்தல் முறை மாற்றப்படுவதும் இதில் முக்கியமாகிறது.
போதைப் பொருள் விற்றாவது பணம் தேடி செலவழிக்க வேண்டி நிலையே இப்போதுள்ளது. இவை நிறுத்தப்பட வேண்டியது முக்கியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments