சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 17 வயது மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகியோரை கொட்டதெனியாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பொலிஸ் மாஅதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கம்பஹா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இருவரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதனையடுத்து பொலிஸ் மாஅதிபருக்கு தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு அதுதொடர்பான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
17 வயது மாணவன் மற்றும் மற்றைய நபர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமை விசாரணையின் மூலம் உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
0 Comments