Ticker

6/recent/ticker-posts

தேசிய அபிவிருத்திக்காக தன்னையே அர்ப்பணித்த ஒலுவில் !


எம்.எல். பைசால் (காஷ்பி)

அம்பாரை மாவட்டத்தின் தென் கிழக்கின் மத்தியில் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைகுட்பட்ட ஒரு கிராமமே ஒலுவில்.சுமார் 2200 குடும்பங்களை கொண்டுள்ள இக்கிராம மக்கள்  கடற்தொழிலினையும், விவசாயத் தினையும்  தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள அதேவேளைகற்பன் உற்பத்திபாய் தென்னை ஓலை பின்னுதல்தும்பு கைத்தொழில் போன்ற குடிசை கைத்தொழில்களிலிலும் மற்றும் சேனை பயிர்ச்செய்கையிலும் ஈடுபடுகின்றனர். அம்பாரை மாவட்டதில் அப்பயிர்ச்செய்கைக்கு பெயர்போன கிராமங்களில் ஒன்றாக ஒலுவில் காணப்படுகின்றது.


எமது நாட்டில் தனது வாழவாதார தொழிலின் இரு துறைகளையும் இழந்த அல்லது இழந்து கொண்டிருக்கின்ற கிராமம் என்றால் அது ஒலுவிலேயாகும்.

70 களின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை  நாட்டின் ஆட்சியாளர்களால்  அல்லது பிரதேச அரசியல் தலைவர்களால்   இம்மக்களின் அனுமதி பெறாமல் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மறுக்குளத்தின் முக்கிய பகுதிகள்விழாவடி மடு, அடம்பன் குளம்பொன்னம்வெளி,  விசாரைசூலா, முதுரியடி வட்டைகாசான்கேனி போன்ற பல வயல், சேனை பயிர் நிலங்கள் கரும்பு செய்கைபாதுகாப்பு அரண் உர உற்பத்தி சாலை,புனித பூமி பிரதேசம்  என்ற பல திட்டங்களுக்காக சுவீகரிக்கப்பட்டிருக்கின்றன.

அந்நிலங்களை அண்மித்து வாழ்கின்ற எமது சகோதர இனத்தவர்கள் கூட தங்களது பலத்தினை பிரயோகித்து பறித்துக்கொண்டனர்.
இவ்வியத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வழக்குகள் தொடரப் பட்டு அதற்கான முடிவின்றி இம்மக்கள் காணப்படுகின்றனர். 

1990 ம் ஆண்டு இப்பிரதேசங்களில் ஏற்பட்ட பயங்கரவாத பிரச்சினையினால்  இக்கிரமத்தினை சேர்ந்த 16 விவசாயிகள் படு கொலை செய்யப்பட்டனர்-ஷஹீதாக்கப்பட்டனர்- (அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னிப்பானாக)
இதனை தொடர்ந்து வயல்,சேனை பகுதிகளில்  வாழ்ந்த மக்கள் பயத்தின் காரணத்தினால் அங்கு குடி இருப்பதை தவிர்த்தனர். இதனால் காட்டு யானைகளால் நூற்றுக்கணக்கான  தென்னை மரங்களும்சேனை பயிர்களும் சேதப்படுத்தப்பட்டு, முற்றாக அழிக்கப்பட்டன.

ஏற்கனவே பல நிலங்களை இழந்த இம்மக்கள் மிகுந்த சோகத்துக்குள்ளானார்கள். அதற்கான நிவாரணங்களை கூட அவர்களால் பெற முடியவில்லை.

80 களின் பிற்பட்ட காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரவேசம் அம்பாரை மாவட்டதின் சகல கிராமங்களயும் ஈர்த்தது. பெரிய கிராமங்கள் ஒரு வித தயக்கத்தினை ஆரம்பத்தில் காட்டிய பொழுதிலும்  சிறிய கிராமங்களான நற்பிட்டிமுனை, மத்திய முகாம், இறக்காமம், வரிப்பதன்சேனைபாலமுனைஒலுவில்,மாவடிப்பள்ளி போன்ற கிராமங்கள் 100 வீத ஆதரவினை அக்கட்சிக்கு கொடுத்தன..

எதிர் கட்சியில் இருந்த போது உரிமைகளையும் ஐக்கியத்தினையும் பற்றி பேசிய அதன் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 94 ம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கா அம்மையார் அவர்களின் ஆட்சியில் பங்குதாரராக சேர்ந்து அபிவிருத்தி சார்ந்த உரிமைகளை முதன்மையாகாகக் கொண்டு சிந்தித்து செயற்பட்டார். கிழக்கு மாகாணத்தின் பொதுவான அபிவிருத்தி மூலம்  அம்பாரை மாவட்டதினை விசேடமாகக் கொண்டு  முழு நாட்டுக்குமான அபிவிருத்திக்காக தன்னை அர்ப்பணித்து 
பணிபுரிந்தார். 

தலைவர் அவர்களின் பல திட்டங்களை முதன்மை படுத்தி தேசிய ரீதியாக செயற்படுத்துவதற்கு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம்தான் ஒலுவில். 
இம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் திட்டங்களுக்கும் முழுமையாக ஆதரவளித்து  நின்ற காரணத்தினால் தென் கிழக்கு  பலகலை ககம், துறைமுகம்அதனுடன் இணைந்த வெளிச்சவீடுமஹபொல பயிர்ச்சி நிலையம்துறைமுக விடுதிதொலைத்தொடர்பு நிலையம் என அபிவிருத்தியால் நிரம்பியது. 

ஒரு காலத்தில் இக்கிராமத்து மக்கள் தங்களை அதன் அருகில் உள்ள பெரிய கிராமங்களை சொல்லியே அடையாளப் படுத்திக் கொள்வார்கள். பிற்பட்ட காலங்களில் இன்னிலை மாறி பெரி கிராமத்தவர்கள் இக்கிரமத்தின்  பெயரையும்  
அதில் உள்ள அபிவிருத்தியையும் குறிப்பிட்டு  தங்களை அறிமுப்படுத்தும் அளவிற்கு ஒலுவில் பிரல்யம் பெற்றது. மட்டுமல்ல அஷ்ரப் அவர்களின்  கிராமம் என்றும் மக்கள் அழைத்த வரலாறும்  உண்டு.

 துறைமுக நிர்மாணிப்புக்காக தொழில் இழந்த தொழிலாளர்களுக்கும் , நில உரிமையாளர்களுக்கும் அதற்கான மாற்றீடுகளும்இழப்பீடுகளும் வழங்கப்பட்டன. (சில காணி உரிமையாளர்கள் இழப்பீடுகளை இது வரை பெறவில்லை).
துறைமுக கட்டுமான பணியில் கடற்தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் துறைமுக நிர்மாண ஒப்பந்த காரர்களுடன் சிலகாலம் தொழில் செய்வதற்க்கான சந்தர்பத்தினையும் பெற்றுக்கொண்டனர். பணி முடிந்த பிறகே அவர்கள் தொழில் இன்மை பற்றி சிந்திக்க தலைப்பட்டனர்.
பாரம்பரியமாக செய்து வந்த தொழிலினையும் அதன் துறையினையும் இழந்து நிற்கதியாகி ,செய்வதறியாது துடித்த தொழிலாளர்கள் துறைமுக அதிகாரிகளிடம் சென்று அனுமதி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

1999 ம் ஆண்டு மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம்: எம் எச். எம். அஷ்ரஃப் அவர்களால் மிக கோலாலகலமாக திறந்து வைக்கப்பட்ட ஒலுவில் வெளிச்ச வீட்டுத் துறை இன்று கடல் அரிப்பினால் கோலம் குன்றிஅழிவுற்றுஅதனை பயன் படுத்தி கொண்டிருந்த ஆழ்கடல் மீனவர்கள் பாதிக்கப்பட்டு, அதன் அருகே வாழும் குடியிருப்பாளர்கள் நாளாந்தம் மன பீதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒலுவில் மக்களின் மாலை நேர  பொழுது போக்கிற்க்க்காக  ஒன்று கூடுவதற்கு இருந்த சொற்ப கடற்கரை பிரதேசமும் கூட இன்று அழிவுற்றுள்ளது.

துறைமுகத்‌தின் நிர்மாப் பணி முடிவடைந்த போதுதான் ஏற்படக்கூடிய பாதிப்பினை பற்றி சிந்திக்கத் தொடங்கினர் எதிர்காலத்தில் இக்கிராமத்தின் முக்கிய பிரதேசங்கள் துறைமுகத்திற்க்காக சுவீகரிக்கப்படக்கூடிய நிலைமையினையும்கடல் அரிப்பு ஏற்படக்கூடிய அபாயமும், அதனால்மக்கள் மிகுந்த   சிரமத்தினை  எதிர்கொள்ள  வாய்ப்பு  ஏற்படும் என்றும் இது ஒலுவிலை மட்டுமல்லாது பிராந்தியதின் முழுகடல் பரப்பினையும் பாதிக்கும் என்ற கருத்துக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
.
ஒலுவில், பாலமுனை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள்  ஒலுவில் வெளிச்ச வீடுநடு துறை மீனவர் சங்ககங்களின் உதவியுடன் 2008 ம் ஆண்டு அம்பாரை மாவட்டத்‌தின் முக்கிய துறை சார் நிபுணர்களை அழைத்து எதிர்காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றி கருத்துக்களை பெற்று ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்க்காக அல் ஹம்றா மஹா வித்யாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கினை சில அரசியல் பிரமுகர்களால் தனிப்பட்ட இலாபத்திற்க்காக பொலிசாரினை கொண்டு அரசுக்கு எதிரான கூட்டம் என்று குற்றம் சுமத்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தினையும் அதற்க்காக அக்கரைப்பற்று  நீதி மன்றதில் வழக்கு தொடரப்பட்டு அதில் ஈடுபட்ட பிரமுகர்களை துயரத்தில் ஆழ்த்தியமையும் வரலாறாகும்.

தலைவர் அவர்களின் திட்டங்களில் உருவானதே ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் அதிகமான தென்னை மரங்கள் உள்ள பகுதிகளையும், அம்மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிப்போன நன்னீர் மீன்பிடி கற்பன் உற்பத்தி தும்பு கைத்தொழில் போன்ற தொழில்களில் ஈடுபடு வதற்கு துணை நின்ற ஆற்றங்ங்கரை பிதேசங்களையும் தனது கட்டுப்பாட்டுகுள் கொண்டுள்ளது. ஆரோக்கியத்துக்காக பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானமும் கூட அவர்களை விட்டும் பறி போய் உள்ளதை சுட்டிக்காட்டலாம்.

துறைமுகமோ தென்கிழக்கு பல்கலை ககமோ அதனுடன் இணைந்துள்ள நிறுவனங்களோஅல்லது வயல் பிரதேசங்களில் சுவீகரிக்கப்பட்டுள்ள   நிலங்களினாலோ  இம்மக்களுக்கு நேரடியாக எப்பயனையும் கொடுக்கவில்லை.

துறைமுகத்தினால் தொழில் இழந்த மீனவர்களுக்கு  துறைமுகத்தில் உரியவர்களின் தராதரங்களுக் கேற்ப தொழில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட கதை கூட 
சொல்லளவிலேயே!

தென்கிழக்கு பல்கலைக் கக நிருவாகத்தினால் நியமனம் செய்யப்படும் தொழில் துறைகளில் கூட இம்மக்கள் எந்தளவு உள்வாங்கப்பட்டுள்ளனர் ?

நிலம் இழந்து , தொழில் இழந்து , இருப்பதற்கு கூட பயந்த நிலையில் வாழும் இக்கிரமத்து மக்களுக்கு அமைய பெற்றுள்ள நிறுவனங்கள் கூட கைநீட்ட முன் வரவில்லை.

கடல் அரிப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதனால் அல்லது துறைமுகத்தின் செயற்பாடுகளில் மாற்றங்களை செய்வதனால் நிலமையினை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
.
(2015.02.16 ம் திகதி துறைமுக அமைச்சர் கௌரவ அர்ஜூனா ரனதுங்க அவர்கள் இத்துறைமுகத்தினையும் அதனால் ஏற்பட்டிருக்கும் கடல் அரிப்பினயும் பார்வையிட்டதன் பிறகு "முன்னால் ஜனாதிபதி முறையான பகுப்பாய்வு இன்றி இத்துறைமுகத்தினை அமைத்துள்ளார் என குற்றம் சுமத்தியதுடன் இத்துறைமுகம் நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுதித்தியுள்ளது" என கூறியுள்ளார் என்பதை  சுட்டிக்காட்டுவது பொருத்தம்.(விடியல் இணைய தளம் 2015/02/016).

தென் கிழக்கு பல்கலைக்ககம் கல்வியுடன் சார்ந்த நிறுவனமாக இருப்பதனால் ஒலுவில்  மக்களின்   கல்விக்குதுணை நிற்க்க முடியும்,அது  தேசிய ரீதியான  செயற்பாட்டினை முன்னெடுத்தாலும் சமுகத்தின் உயர் கல்வியின் தரத்தினை மேம்படுத்துத்துவதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பினை செய்ய முன் வரலாம். அம்பாரை மாவட்டதில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளை இனங்கண்டு பல வளங்களையும் கொண்டுள்ள இப்பல்கலைக்ககம்  தனது செயற்ப்பாட்டிற்க்கு  மேலதிகமாக 
கல்வி மேம்பாடு பற்றி சிதிக்கலாம் . ஒலுவில் கிராமத்து உயர்கல்வி விருதிற்க்காக தனது விசேட பார்வையின் கீழ் திட்டங்களை முன்னெடுத்து உயர்கல்விக்கு துணைபுரியலாம் (சென்ற அரசாங்க காலத்தில் பல்கலைக் ககம் அமையப் பெற்றுள்ள கிராமங்களிலுள்ள பாடசாலையின் உயர் கல்வி மேம்பாட்டிற்கு நடவடிக்கைகளை பல்கலைக் கழகங்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு கதையும் உண்டு அதன் உண்மை தன்மை தெரிய வில்லை) 
.
அரசியலில் முஸ்லிம் காங்கிரசின் உறவே அங்கு முதன்மயாக காணப்படுகின்றது.  எனவே இக்கிராமம் தற்போது எதிர்கொண்டிருக்கின்ற அவல நிலையினை போக்கி  
தேவயான நடவடிக்கைகளை எடுத்து தேசிய ரீதியாக அபிவிருதியில் தன்னையே அர்ப்பணித்து   நிற்கும் இம்மக்களுக்கு  உரிய லா பலன்களை 
பெற்றுக் கொடுப்பது அக்கட்சி மீதுள்ள தார்மீக பொறுப்பும் கடமையுமாகும். 



Post a Comment

0 Comments