இந்தியா சென்றுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்திற்கும் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேற்று மாலை 6 மணிக்கு கோபாலபுரத்தில் அமைச்சர் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் கருணாநிதியிடம் எடுத்து கூறினேன்.
ராஜபக்ச மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். மேலும் இராணுவம் அதிகம் உள்ள முகாம்களில் இருந்து இராணுவத்தினர் திரும்ப பெறப்படுவார்கள்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
பாடசாலைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். மலைவாழ் தமிழர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது என்று விரும்புகிறோம். எனவே மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்.
இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் நிம்மதியாக வாழலாம். விருப்பம் உள்ளவர்கள் வரலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
விரைவில் நாங்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேச இருக்கிறோம். அதற்கு நாங்கள் நேரம் கேட்டு இருக்கிறோம் என்றார்.

0 Comments