கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவது நிறுத்தப்படவில்லை என்றால் 1857 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் ஒரு மதக் கலவரம் முன்னெடுக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலம் நாடியாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுரேந்திர ஜெயின், இது கிறிஸ்தவ ஆலயத்தின் சதிதிட்டம் எனவும் கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் தாக்குதல் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளின் கலாசாரத்திற்கு மாறானது என்றும் கூறியுள்ளார்.
ஹிசாரில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டது தொடர்பாக சுரேந்திர ஜெயின் தெரிவிக்கையில், கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் கிறிஸ்தவர்கள் கிடையாது. இவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவ ஆலயம் அங்கு கட்டப்பட வேண்டிய அவசியம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கிறிஸ்தவர்கள் வத்திகானில் ஹனுமான் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளிப்பார்கள் எனில் இந்தியாவில் எந்தபகுதியில் வேண்டுமென்றாலும் கிறிஸ்தவ ஆலயம் கட்டலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்படடமை மற்றும் ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்ட தேவாலயத்தை மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியமை உள்ளிட்ட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு சம்பவம் குறித்தும் சுரேந்திர ஜெயின் வருத்தம் தெரிவித்துள்ள அதேவேளை இரண்டு சம்பவங்களும் மிகுந்த வருத்தம் அளிக்கின்றது என்று பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments