மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (3) மாலை 4.50 மணியுடன் நிறைவிடைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை காலை முதல் இன்று புதன் கிழமை மாலை வரையிலான மூன்று தினங்கள் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது.
குறித்த கிணற்றின் இறுதி அடி மட்டம் வரை அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கிணறு 434 சென்றி மீற்றர் ஆழம் கொண்டது என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த கிணற்றில் அகழ்வுப்பணிகள் நிறைவடைந்துள்ள போதும், கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மண்ணில் உள்ள தடையங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை மீண்டும் நாளை வியாழக்கிழமை (4) இடம் பெறவுள்ளது.
மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட சகல தடயப்பொருட்களையும் பகுப்பாய்விற்கு உற்படுத்தி மன்னார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த கிணறு தொடர்பான வழக்கு விசாரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கிணற்றை மன்னார் பிரதேச சபையினை பெறுப்பேற்று திருத்தப்பணிகளை மேற்கொண்டு மக்களின் பாவனைக்கு விட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பிரதேச சபை பொறுப்பேற்கும் வரை மன்னார் பொலிஸாரை குறித்த கிணற்றிற்கு பாதுகாப்பை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.குறித்த மர்ம கிணறு கடந்த திங்கட்கிழமை 1 ஆம் திகதி முதல் இன்று புதன் கிழமை மாலை 4.50 வரை கட்டம் கட்டமாக தோண்டப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த கிணற்றில் இருந்து தடையப்பொருட்களாக எலும்புத் துண்டுகள், பல்,பயன்படுத்தாத துப்பாக்கி ரவை,முள்ளுக்கம்பிகள், 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 25 சத நாணாயக்குற்றி ஒன்று, 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதி திகதியிடப்பட்ட 145 ரூபாய் பெறுமதி அச்சிடப்பட்ட பியர் டின் ஒன்று, வீதி அபிவிருத்திக்கான பாரிய கற்கள், வாகனங்களுக்கு பயன்படுத்தும்ஒ யில் சீல்,எலும்பு ஓட்டு எச்சங்கள் ஒரு தொகுதி, யூ வடிவிலான கம்பி,சில்வர் கரண்டியின் கைபிடி போன்றவை தடயப்பொருட்களாக குறித்த கிணற்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. tamilwin.com
0 Comments