கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் சுனில் ரத்னாயக்க என்பவருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை -26- காலை 9. 30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சுனில் ரத்னாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறை செய்தித் தொடர்பாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.
மிருசுவில் பிரதேசத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சிறுவனொருவன் உள்ளிட்ட 8 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே குறித்த இராணுவ வீரருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுனில் ஜயரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு ஏனைய நான்கு சந்தேகநபர்களும் போதிய சாட்சிகள் இன்மையால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments