Ticker

6/recent/ticker-posts

வெலிகம W15 ஹோட்டல் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் தேசபந்து - டிரான் தொடர்பு அம்பலமானது.


பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் பதவி நீக்கம் தொடர்பான பரிந்துரையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவில், பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய சாட்சியமளித்தார்.

2023ம் ஆண்டு வெலிகம W15 என்ற ஹோட்டல் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம்  இந்த விசாரணையின் போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தென்னகோனுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளை குற்றச்செயல் ஒன்றுக்கு  பயன்படுத்தியதால், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் விளைவாக ஒரு பொலிஸ் அதிகாரி மரணமடைந்தார்.

விசாரணை நடவடிக்கைகளின் போது, குழுவின் தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன, விசாரணையின் முன்னேற்றம் குறித்து பதில் பொலிஸ் மாஅதிபரிடம் வினவினார்.

தனித்தனி விசாரணைகள் இரண்டு நடந்து வருவதாகவும், இதில் ஈடுபட்டுள்ள ஏழு பேரும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் பதில் பொலிஸ் மாஅதிபர்  உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் காரணமாக பொது மக்களின் பொலிஸ் மீதான நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் ஒப்புக்கொண்டார். மேலும், அதிகாரிகள் சரியான அடையாளத்தை காட்டாமல் ரகசியமாக இந்த இடத்திற்கு சென்று பின்னர் தப்பிக்க முயற்சித்ததாகவும் அவா் கூறினார்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலதிக சொலிசிடர் ஜெனரல் திலீப பீரிஸ் பதில் பொலிஸ் மாஅதிபரிடம் , இறந்த அதிகாரிக்கு வழங்கப்பட்ட  பதவி உயர்வு மற்றும் நஷ்டஈடு பற்றி கேள்வி எழுப்பினார்.

இதற்கான சாட்சியங்கள்  அழிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதியில்லா பதவி உயர்வு குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் பதில் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

அக்காலத்தில் மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த டிரான் அலஸ் இந்த செயல்பாட்டைப் பற்றி அறிந்திருந்ததாகவும், அவர் நேரடியாக இதில் ஈடுபட்டிருந்ததாகவும் பதில் பொலிஸ் மாஅதிபர் உறுதிப்படுத்தினார்.

இந்த செயல்பாடு  பொலிஸ் மாஅதிபர் மற்றும் அமைச்சர் இருவராலும் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் அது தொடர்பாக அப்போது ஒரு கூட்டு ஊடக சந்திப்பும் இவர்களால் நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments