தேர்தல் நடத்த வேண்டும் என்ற அசிங்க அவசரத்தை கைவிட்டு, அரசாங்கம் எங்கள் கருத்துகளையும் உள்வாங்கி, சுகாதார நிவாரண, வாழ்வாதார நிவாரண நடவடிக்கைகளையும் முன்னெடுக்க கூறுகிறேன் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசன் அவரின் கருத்தை திரிபு படுத்துபவர்களுக்கு முகப்புத்தக பக்கத்தில் விளக்கமும் கொடுத்துள்ளார்.
அவரது பதிவை கீழே தருகின்றோம்,
முதல் தொடர்பாளர்' (First Contact Persons) என்றால் யார்?
கொரொனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில், ஒன்றாக உறங்கி, வேலை செய்து, பயணித்து வாழ்ந்தவர்கள் ஆகும். இவர்களைதான் முன்னுரிமை கொடுத்து சோதனை செய்யுங்கள் என்று சொன்னேன். (அதாவது இன்று சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட, 24 பேர் மாதிரி இருப்பார்கள் என்றேன்!)
ஆனால், நான் அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் போட “பொய் தகவல்” தந்ததாக, என் கருத்தை திரித்து கூறினார்கள்.
எஸ்பி திசாநாயக்க, கம்மன்பில, இன்னும் பல அரசாங்க அமைச்சர்கள் உள்ளிட்டு டேன் பிரியசாத் என்ற வழமையாக முஸ்லிம் மக்களை தீட்டி தீர்க்கும் இனவாதி வரை என்னைப்பற்றி கேவலமாக பேசினார்கள்.
இவர்களது இணையம் முழுக்க என்னை, “வெளிநாட்டுக்காரன், கள்ளத்தோணி, பறத்தமிழன், சக்கிலியன், புலி, பிசாசு” என்றெல்லாம் சுந்தர சிங்களத்தில் திட்டிதீர்த்தார்கள்.
அரசு ஆதரவு தமிழ் முகநூல் போலி கணக்குகளும் என்னை விமர்சனம் செய்தன.
இதற்கிடையில் பௌத்த தகவல் நிலைய இயக்குனர் ஜிநானந்த தேரர் என்னை கைது செய்யும்படி பொலிஸ் மாதிபரிடம் புகாரும் செய்தார். பொலிஸ் வீட்டுக்கு வரும்வரை பார்த்துகொண்டு இருந்தேன்.
தமிழரோ, முஸ்லிமோ, அரசியல்வாதிகள், தேசிய பிரச்சினைகள் பற்றி பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு வீசுவதை பொறுக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்பது இவர்களது எழுதப்படாத சட்டம்.
எல்லோரையும் போல் நான் “கப்சிப்” ஆள் இல்லை என இவர்களில் சிலருக்கு இன்னமும் தெரியலை.
'முதல் தொடர்பாளர்' என்ற இப்படியானோர், சுமார் 40,000 பேர் இருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கட்சி தலைவர் கூட்டத்தில் சொன்னதைதான் நான் சொன்னேன் என்று நேற்று விசேட ஊடக மாநாட்டில் நான் சிங்களத்தில் உரக்க சொன்னதும், இவர்கள் “கப்சிப்” ஆகி விட்டார்கள்.
பெரிய இடத்தில், சவேந்திர சில்வாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோ, என்னவோ! போதாதற்கு அவர் பாடசாலை, பல்கலைக்கழக திறப்புகளுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.
இன்று கொழும்பில் சோதனையின் போது ஒரே நாளில், ஒரே இடத்தில் 24 பேர் அகப்பட்டவுடன், என்னை திட்டிய நபர்கள் இப்போது "இஞ்சி தின்ற குரங்குகளை" போல முழிசிக்கொண்டு இருக்கிறார்கள்.
மீண்டும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள்.
இவற்றையிட்டு நான் மகிழ்ச்சியடையவில்லை. தேர்தல் நடத்த வேண்டும் என்ற அசிங்க அவசரத்தை கைவிட்டு, அரசாங்கம் எங்கள் கருத்துகளையும் உள்வாங்கி, சுகாதார நிவாரண, வாழ்வாதார நிவாரண நடவடிக்கைகளையும் முன்னெடுக்க கூறுகிறேன்.
முதற்கட்டமாக, 'முதல் தொடர்பாளர்' களை தேடிப்பிடித்து, “சோதனை, சோதனை, சோதனை” செய்யுங்களப்பா.... அவ்வளவுதான்!

0 Comments