எதிர்வரும் ஈத் பெருநாள் தினத்திற்கு முன் உலகம் கொரோனா வைரஸிலிருந்து விடுபடும் என்று நம்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புனித இஸ்லாமிய மாதமான ரமழான் மாதத்தைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள், கொரோனா தொற்றுநோயால் இந்த ஆண்டு பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கவும், உடல் ரீதியான தூரத்தை உறுதிப்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டதோடு. இது தொடர்பாக விழிப்புணர்வை பரப்பிய சமூகத் தலைவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
"புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த ரமழான் அனுசரிக்கப்பட்டபோது, இந்த முறை இவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.”
“இப்போது நாம் கடும் நெருக்கடியில் இருக்கின்றோம். இந்த புனித மாதத்தை பொறுமை, உணர்திறன் மற்றும் தன்னலமற்ற தன்மையுடன் கடைப்பிடிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.”
“இந்த முறை, கடந்த காலத்தை விட அதிகமாக பிரார்த்திக்க வேண்டும், உலகம் கொரோனா வைரஸிலிருந்து இந்த ஈத் பெருநாளைக்கு முன்னர் விடுபடுவதற்கு பிரார்த்திக்க வேண்டும்” என்று அவர் தனது மாதாந்த “மான் கி பாத்” வானொலி உரையின் போது கூறியுள்ளார்.

0 Comments