Ticker

6/recent/ticker-posts

கொரோனாவிலிருந்து குணமடைந்த 97 வயது முதியவர்!


இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மூன்று லட்சத்தினை கடந்துள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 8,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல முன்னணி மூன்றாம் நிலை சிகிச்சை மற்றும் பன்சிறப்பு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 97 வயது முதியவர் தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக என்டீரிவி இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

97 வயதான கிருஷ்ண மூர்த்தி, சென்னை காவேரி மருத்துவமனையில் மே 30,   2020-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், இருமல் மற்றும் லேசான மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகளுடன் தாமாக முன்வந்து மருத்துவமனையில் சேர்ந்தார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஆகிய பிரச்சனைகளும் அவருக்கு ஏற்கனவே இருந்த காரணத்தால், அவரது உடல்நிலையில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு சுவாசிப்பதில் கூடுதல் உதவியாக இருக்க ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கான உணவு மற்றும், இதர செயல்பாடுகள் செவிலியர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன. உணவு முறைகளில் அதிக புரதச்சத்து நிறைந்த காய்கறி உணவுகளை சேர்த்துக்கொள்ளப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பிறகு அவரது காய்ச்சல் குறைந்து,சுவாசிப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. சில நாட்கள் கழித்து, அவர் தாமாக உணவு உண்ண ஆரம்பித்து, பின் தாமாகவே நடக்கவும் துவங்கினார்.

“தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தபோது, கிருஷ்ண மூர்த்தி உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். அவர் மற்ற நோயாளிகளை ஊக்கப்படுத்தி; அவர்களை குணமடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்குமாறும் அறிவுரை வழங்கினார். அவருக்கு ‘கோவிட்-19 பாதிப்பு இல்லை' என்ற பரிசோதனை முடிவுகள் வந்ததும், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.“ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றிகரமான சிகிச்சை குறித்து பேசிய, மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், “கொரோனா தொற்றிலிருந்து போராடி மீண்ட 97 வயது முதியவர் காட்டிய தைரியமும், அசராத நம்பிக்கையும் பாராட்டுக்குரியது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இது நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.  இந்த பெரும் தொற்று நோய்க்கு எதிரான எங்களது இந்த போராட்டத்தில், எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக அந்த முதியவருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 97 வயது முதியவரும், அவரை மீட்ட மருத்துவமனை நிர்வாகமும் கொரோனா நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை வெளிச்சத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.(ndtv)

Post a Comment

0 Comments