( ஐ.ஏ. காதிர் கான் )
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகவும், சமூகத்தின் மீதுள்ள பாரிய பொறுப்பாகவும் தான் கருதுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம் பாரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கட்டுகஸ்தொட்டையில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான முக்கிய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது பல கட்சிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தமது ஆதரவுகளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பினையும் அதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் எமது சமூகத்தின் பிரதி நிதித்துவத்தினையும் தேசிய அரசியல் வரலாற்றுடன் உற்று நோக்குகையில், எமது சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, மதம், கலாசாரம் மற்றும் ஏனைய துறைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையிலேயே உள்ளது.
கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில், எமது சமூகம் விட்ட தவறை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் 2020 பொதுத் தேர்தலில் மீண்டும் நமக்குக் கிடைத்துள்ளது. கடந்த கால தேசிய அரசியல் நீரோட்டத்தினை ஒப்பிடுகையில், அவ்வப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக, எமது உரிமைகளும் சலுகைகளும் பாதுகாக்கப்பட்டதுடன், சமூகம் சார்ந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தமது சுயநல இலாபங்களுக்காகவும், பதவிகளுக்காகவும், மக்களை அடமானம் வைத்து கட்சி அரசியலில் ஈடுபட்டதன் விளைவாகவே, எமது சமூகம் அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் வெறுப்பையும் அதிருப்தியையும் சந்தித்திருப்பதோடு, இனவாதிகளின் செயற்பாடுகளுக்குத் தீனி போடும் விடயமாகவும் அது அமைந்துள்ளதையும் நாம் அறிவோம்.
எனவே, தற்போதைய இந் நாட்டின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னணி அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளையும் நன் மதிப்பையும் பெற்றிருக்கும்; ஒருவனாக, அமையவிருக்கும் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு பிரதிநிதியாக எமது சமூகத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாப்பேன். அத்துடன், அரச மற்றும் தனியார் துறையினரின் உதவிகளையும் பெற்று, எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் என்னால் முன்னின்று செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
( ஐ.ஏ.காதிர் கான் )

0 Comments