கொரோனா தொற்று தொடர்பில் பாரிய விளைவுகள் எதுவும் இலங்கையில் ஏற்படவில்லை. இதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவிற்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கொரோனா தொற்றின் பாரிய அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றிய ஜனாதிபதிக்கு எங்களுடைய ஆதரவுகளைத் தெரிவிப்பதா அல்லது அவரல்லாத வேறு கட்சிகளுக்கு ஆதரவுகளை வழங்குவதா என்று மக்களே தீர்மானிக்க வேண்டும் என, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் கேள்வி எழுப்பினார்.
உடுநுவர தொகுதியில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,
ஜனாதிபதி கொரோனா தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாத்த ஒரு மாபெரும் தியாகவாதி என்றுதான் கூறவேண்டும். இது தொடர்பில் அவர் தீவிர கரிசனை காட்டி உடனடியாகவே செயற்பட்டார். அவர் அக்கறை காட்டியிருக்காவிட்டால், இலங்கையில் பெரும் எண்ணிக்கையானோர் பாதிப்படைந்து இருப்பார்கள். கூடுதலான மரணங்களும் சம்பவித்திருக்கும்.
உலகில் மிகவும் விரைவாக மீண்ட நாடுகளின் பட்டியலில் நாம் உள்ளோம். நிறைவேற்று அதிகாரம் மாத்திரமே இயங்கியதால் தான் நாம் மீண்டோம். இன்று இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை உற்று நோக்கிப்பார்த்தால், சமஷ்டி நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பெரிதும்பாதிப்படைந்துள்ளன. மத்திய அரசாங்கம் பலமாக அமைய வேண்டும். கொரோனா தொற்றுத் தாக்கத்தின் காலப்பகுதியிலும் கூட இலங்கையின் தரம் உயர்வாகவே இருந்தது. தற்போது தேயிலையின் தரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆடை உற்பத்திகளும் பலமடைந்துள்ளன. குறைந்தளவிலான மரணங்களே பதிவாகி உள்ளன. இதன் மூலமாக, எமது சுகாதாரத்தரம் உயர்வடைந்து, மீண்டும் சுற்றுலாத்துறைக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது நாடு ஏனைய நாடுகளைப் போல் மிக மோசமாகப் பாதிப்படைய வில்லை என்பதே உண்மை. குறைந்த இறப்புக்கள், குறைந்த நோயாளர்களே அடையாளம் காணப்பட்டனர். இலங்கைக்குள் தற்போது பெரியளவில் கொரோனா வைரஸ் தொற்றார்கள் எவரும் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் அதிகளவிலான உயிர் இழப்புக்கள் இடம்பெற்ற போதும், எமது நாடு இந்த சிக்களில் இருந்து மீள எழும்பி உள்ளது. இதற்கு எமது ஜனாதிபதி தலைமையிலான ஆய்வாலர்கள், மருத்துவர்கள், பாதுகாவலர்கள் முன்னெடுத்த வேலைத்திட்டங்களே காரணமாகும் என்றார்.

0 Comments