ஜாவா கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான எயாா் ஏசியா விமானத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 21 உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘எயாா் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 90 இற்கும் அதிகமான கப்பல்களும், விமானங்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்அடுத்தகட்டமாக, கடலின் ஆழப்பகுதியில் தேடும் பணிகளுக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் மேலும் 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 30 உடல்கள் கடல்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய பலர் சீட் பெல்ட்களை அணிந்தபடி பிணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போர்னியோ நகர கடற்கரையோரத்தில் இருந்து சுமார் 1,575 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாவா கடற்பகுதியில் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உடல்கள் சிதறி கிடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

0 Comments