ஹைதராபாத்தில் நேரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு கடந்த மே மாதம் முகமது அப்துல் பசால் ஷேக் என்னும் வாலிபர் சென்றுள்ளார்.
அங்குள்ள ராட்சத ஆமையைப் பார்த்தவர், அதன்மீது ஏறி நின்று படம் எடுத்து ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால் நிறைய ‘லைக்’ கிடைக்கும் என நினைத்தார்.
அதற்காக அவர் பாதுகாப்பு வேலியை தாண்டி சென்று, ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்தார். அதை அவர் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
அந்தப் படத்தை உள்ளூர் நாளேடு ஒன்றும் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைக்கண்ட உயிரியல் பூங்கா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து, போலீசில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து பத்திரிகை செய்தியையும், ‘பேஸ் புக்’ வலைத்தளத்தில் அவரது பக்கத்தையும் பார்த்து உறுதி செய்த போலீசார் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் வனவிலங்கு பாகுகாப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு பசல் ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
‘பேஸ் புக்’ வலைத்தளத்தில் நிறைய ‘லைக்’ வாங்க ஆசைப்பட்டவர், இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

0 Comments