Ticker

6/recent/ticker-posts

மாட்டு இறைச்சி தடை குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது

இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் பசுக்களையும் எருதுகளையும் மட்டும் கொல்வதற்கு தடை விதித்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசிடம் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் பசுவதைக்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்டது. இதற்காக மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச்சியை விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனிலும் வெளிவர முடியாது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்க முடியும்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றின் மீதான விசாரணை, நீதிபதிகள் வி.எம்.கானடே, ஏ.ஆர்.ஜோஷி தலைமையிலான அமர்வு முன் மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் “மகாராஷ்டிராவில் பசுக்கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? ஆடுகள் உட்பட மற்ற விலங்குகள் கொல்லப்படுவதில் ஆட்சேபணை இல்லையா?” என கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்குரைஞர் சுனில் மனோகர் “அரசின் இந்த நடவடிக்கை ஒரு தொடக்கம்தான். பசு, எருது ஆகியவற்றைப் போல் மற்ற விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கும். தற்போது பசு, எருதுகள் பாதுகாக்கப்படுவது அவசியமானதென அரசு கருதுகிறது” என்றார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அஸ்பி சினாய் “அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. குறிப்பாக, வெளி மாநிலங்களிலிருந்து மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த மனுக்கள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வரப்படுவதை உரிமங்கள் வழங்குவதன் மூலம் அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, வருகிற 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments