( ஐ. ஏ. காதிர் கான் )
இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிவேக "S - 13" ரக புதிய இரண்டு ரயில் எஞ்சின்கள், இரண்டு சொகுசு பெட்டிகள் மற்றும் 11 சாதாரண பெட்டிகள் அடங்கிய தொகுதி, நேற்று முன் தினம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் எஞ்சின்கள், ரயில் பெட்டிகள் அடங்கிய ரயில் தொகுதி முதற்தடவையாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக, ரயில்வேத் திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ரயில் மார்க்கங்களில், இந்த ரயில் தொகுதி பயணிக்கக்கூடிய திறன் குறித்து ஆராய்ந்ததன் பின்னர், மேலும் சில ரயில் கட்டமைப்புக்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், கரையோர ரயில் மார்க்கம் உள்ளிட்ட ரயில் சேவை அற்ற மார்க்கங்களில் இந்தப் புதிய ரயில்கள் பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வேத் திணைக்கள பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், மேலும் 10 ரயில் எஞ்சின்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைவில் இறக்குமதி செய்வதற்கு
எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது 902 க்கும் அதிகமான ரயில் எஞ்சின்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் 13 எஞ்சின்கள், 60 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என்றும், ரயில்வேத் திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments