சவுதி அரேபியாவின் ரியாத் நகரின் மையத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ வளாகத்தில் நடத்தப்பட்டு வரும் கிளினிக்கில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததற்காக வெளிநாட்டு பெண் மருத்துவர் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சவுதிசுகாதார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது வைத்தியரும் அவரது பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக “சவுதி கெஸட்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையத்தில் சவுதி அரசாங்கத்தின் சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறி இங்கு கருக்கலைப்புகள் செய்யப்பட்டிருப்பதாகதாக மருத்துவ ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
குறைந்தபட்ச மருத்துவ மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் கருக்கலைப்பு செய்துள்ள குறித்த மருத்துவர் தொடா்பாக தகவல் கிடைத்ததை அடுத்து, சுகாதார அமைச்சக அதிகாரிகள் கிளினிக்கை பாிசோதனை செய்துள்ளனர்.
சுகாதார அதிகாரிகள், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதற்காக வாடிக்கையாளரைப் போல் காட்டிக்கொண்டு, மருத்துவரிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய போது, 8000 சவுதி ரியால் கட்டணத்தில் கருக்கலைப்பு செய்ய மருத்துவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையிலேயே சுகததார அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து மருத்துவரையும் அவரது பெண் உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.

0 Comments