ஹட்டன், கொட்டகலை, போகஹவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவா் குறித்த பாடசாலையின் அதிபர் தும்புத் தடியால் தாக்கியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் நடைபெறவிருக்கும் ஆசிரியர் பாராட்டு விழாவிற்காக அறவிடப்படும் 300 ரூபாவை அவரது சகோதரர் செலுத்தாத காரணத்தினால் குறித்த மாணவியை அதிபர் தாக்கியதாக தெரியவருகிறது.
இந்த பாடசாலை மாணவி சிகிச்சைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் நேற்று (29) அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி சாவித்திரி சர்மா தெரிவித்தார்.
அந்தப் பாடசாலையில் படிக்கும் தனது சகோதரனை பணம் கொடுக்கவில்லை என்ற காரணத்தால், அதிபர் கடுமையான வார்த்தைகளால் திட்டும் போது. தான் அங்கு சென்று, 'சோ், என் தம்பியை திட்டாதீர்கள். அப்பா அருகில் வேலை செய்கிறார். தந்தையிடம் கூறி பணம் எடுத்து வருகிறேன் என்று கூறியதாகவும், அப்போது அதிபர் தன்னை தும்புத்தடியால் கொடூரமாக தாக்கியதாகவும் மாணவி கூறியுள்ளார்.
மேலும், அவரது அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு அருகில் இருந்த தந்தை விரைந்து வந்து தன்னை அதிபரிடம் இருந்து காப்பாற்றியதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார். தமக்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாகவும், குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது மனைவி வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றிருப்பதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
தனது நான்கு பிள்ளைகளும் பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும், தனது மகளை காப்பாற்ற சென்ற போது, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தன்னை திட்டியதாகவும், தாக்க முயற்சித்ததாகவும், திம்புலபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். .
இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் கேட்கப்பட்ட போது ஒழுக்காற்று காரணங்களுக்காக மாணவியை சிறு தடியால் பல தடவைகள் தாக்கியதாக அதிபா் தெரிவித்துள்ளார். பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பிரேரணையின் பிரகாரம் பாடசாலையின் மாணவர் தலைவர் ஒருவரினால் ஆசிரியர் பாராட்டு விழாவிற்காக பணம் வசூலிக்கப்படுவதாகவும், பணம் கேட்டு மாணவியை தாக்கவில்லை எனவும் அதிபர் தெரிவித்துள்ளார். பாடசாலைக்கு வந்த மாணவியின் தந்தை தன்னை தாக்க முற்பட்டமை தொடர்பில் திம்புலபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments