தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறுவதற்கு
எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் வட மகாண சபை உறுப்பினர் எம்.கே.
சிவாஜிலிங்கம். யாழ். ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர்
சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். “தேசிய அரசாங்கத்தில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் அமைச்சர்களாவதன் மூலம் எதையும்
சாதித்துவிட முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தே ஆதரவளிக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கக்
கூடியவர்கள் இல்லை என்பதால் அவர்கள் மீது பல தரப்பினரும் வீணான பழிகளை
சுமத்தி வருகின்றனர். 2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது புலிகள் பணத்தைப்
பெற்றுக் கொண்டுதான் தமிழ் மக்களை வாக்களிக்காது விடாமல் செய்தனர் எனக்
குற்றஞ்சாட்டப்படுகின்றது. அதுவும் வெறும் 20 கோடி ரூபாவுக்காகவே அவர்கள்
தமிழ் மக்களை வாக்களிக்காது தடுத்தனர் எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு சமாந்தரமான அரசாங்கத்தை
நடத்தியவர்கள். அவர்களுக்கு வரி மூலம் கிடைத்த பணத்தை எண்ணுவதற்காகவே பல
இயந்திரங்களைப் பயன்படுத்தினர். அப்படிப்பட்டவர்கள் 20 கோடி ரூபாவுக்காக
வாக்களிப்பை தடுத்தனர் என்பது தவறானது. குறைந்த பட்சம் இடைக்கால நிர்வாக
அலகு குறித்தாவது எழுத்துமூல உறுதிப்பாடொன்றை உருவாக்க என் மூலமாக அனுப்பிய
செய்தியை ரணில் விக்கிரமசிங்க அன்று கேட்கக்கூடவில்லை. இடைக்கால நிர்வாகம்
குறித்து பேசாததாலேயே அன்று வாக்களிக்காது தடுத்தனர். பின்னர் என்னிடம்
இது குறித்து அவரே கவலையுடன் மனம் வருந்திக் கூறினார். புலிகள் பணம்
பெற்றுக் கொண்டு தடுத்தனர் என்பது பிழையானது என்றார்.

0 Comments