Ticker

6/recent/ticker-posts

மகிந்தவின் ஆட்சியில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல்,வீண் விரயமே இடம்பெற்றது : விக்ரமபாகு


மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்  வெளிநாடுகளில் கடன்பெற்று  நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறி ஊழல், வீண் விரயமே அபிவிருத்தி என்ற போர்வையில் இடம்பெற்றது என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

 நீர்கொழும்பு  வின்ட்மில் ஹோட்டலில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ஷ கூறியதை அதிகாரிகள் செய்தனர். தற்போது அந்த அதிகாரிகள் செய்வதறியாது உள்ளனர். இனி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என மகிந்த ராஜபக்ஷ கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அந்த சக்தி தற்போது அவர்களிடம் கிடையாது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது என்பது  கசினோ சூதாட்டக்காரர்களை ஊக்குவிப்பது என்றே கடந்த கால அரசாங்கம் கருதியது. இதற்கெதிராக மக்கள் எழுந்தனர். இது சிங்கள மக்களுக்கு விளங்கியது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு இது நன்கு புரிந்தது.
ஏன் அதிக மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும்?; அதிக விலையில் எரிபொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்?; என்று மக்கள் கேட்கத் தொடங்கினர். மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. அதன் விளைவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
100 நாள் வேலைத் திட்டத்தில் சுற்றுலாத்துறைப் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சுற்றுலாத்துறைப் பற்றி அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எனது உதவியை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments