Ticker

6/recent/ticker-posts

மலையக வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட மோடியை மனோ கணேசன் அழைக்கிறார்.



இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஒரு தொகுதிக்கான அடிக்கல்லை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மலையகத்துக்கு விஜயம் செய்து நாட்ட வேண்டும் என்ற அழைப்பை நாம் கூட்டாக விடுத்துள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

நேற்று மாலை இந்திய தூதுவர் வை.கே. சின்ஹா உடன் இந்திய தூதகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங்களுக்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோருடன் நானும் கலந்துக்கொண்டேன். 

கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்த இந்திய அரசின் உதவியுடனான மலையக வீடமைப்பு திட்டம், எதிர்வரும் காலங்களில் செவ்வனே நடைபெற, நாம் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று கூட்டாக இந்திய அரசுடன் இணைந்து செயற்பட உள்ளோம் என்ற உறுதி மொழியை நாம் இந்திய தூதுவருக்கு வழங்கினோம். 

இதன் அடையாளமாக, இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள இந்த வீடமைப்பு திட்டத்தின் ஒரு தொகுதிக்கான அடிக்கல்லை பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மலையகத்துக்கு விஜயம் செய்து நாட்டிட வேண்டும் என்ற அழைப்பை நாம் கூட்டாக விடுத்துள்ளோம். இதை இலங்கை வரும் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொள்ள ஆக்கபூர்வமான முழு முயற்சி செய்வதாக இந்திய தூதுவர் வை.கே. சின்ஹா எமக்கு உறுதியளித்துள்ளார். 

அத்துடன், இந்திய அரசின் வீடமைப்பு திட்ட வீடுகளை பெறவுள்ள பயனாளிகளை தெரிவு செய்வதில், இந்திய தூதரகம் முன்னெடுக்கும் விதிமுறைகளை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதன்மூலம் எந்த வித கட்சி, சங்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள். 

நமது அரசாங்கத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையான லயன் வீடுகளை ஒழித்து தனி வீடுகளை கட்டித்தரும் நிலைபாட்டுக்கு, இந்திய வீடமைப்பு திட்டம் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன்மூலம் மலையக பாட்டாளி வர்க்கம் ஒரு கிராமிய சூழல் நிரந்த சுதந்திர வாழ்க்கையை மலைநாட்டில் வாழும் எதிர்காலத்தை நாம் கூட்டாக உருவாக்குவோம்.

Post a Comment

0 Comments