மலேசியாவில் இதுவரை 139 மியன்மாா் அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அவர்கள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.
ஆட்கடத்தல் கும்பல் மூலம் அழைத்துச் செல்லப்படும் இம்மக்கள், மலேசியாவின் அடர்ந்த வனப்பகுதியொன்றில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நகருக்குள் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.
மலேசியாவின் புகிட் வாங் பர்மா, பெரில்ஸ் வனப்பகுதியில் அவ்வாறான சுமார் 28 முகாம்கள் இருந்துள்ளன. அம்முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள் பசி, மற்றும் நோய்கள் பீடித்ததனால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அந்த வனப்பகுதிகளில் ஆங்காங்கே புதைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியை மலேசிய அதிரடிப்படை அண்மையில் கண்டுபிடித்தது. அங்கிருந்து இதுவரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இத் தகவலை மலேசிய உள்துறை இணை அமைச்சர் வான் ஜூனைதி துங்கு ஜாபர் வெளியிட்டுள்ளார்.

0 Comments