Ticker

6/recent/ticker-posts

திஹாரிய மத்திய மருந்தகத்துக்கு இரண்டு கோடி 50 இலட்சம் ரூபா நிதி - பைசல் காசிம் நடவடிக்கை

( ஐ. ஏ. காதிர் கான் )

   திஹாரிய மத்திய மருந்தகத்தில் பல உட்கட்டமைப்புப்  பணிகளை மேற்கொள்வதற்காக, இரண்டு கோடி 50 இலட்சம் ரூபா நிதியை வழங்குவதற்கு,  சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

   கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குறித்த  மருந்தகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், இங்கு நிலவும் குறைகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். இக்குறைகளை நிவர்த்தி செய்வதற்காக  மேற்படி தொகையை ஒதுக்குவதாக,  மருந்தக நிர்வாகத்திடம் ஏற்கனவே உறுதிமொழி  வழங்கி இருந்தார். இந்த வாக்குறுதிக்கு அமைவாகவே,  மேற்படி தொகையை வழங்குவதற்கு தற்போது  நடவடிக்கை எடுத்துள்ளார்.
   இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கருத்துத் தெரிவிக்கும்போது, 

   எமது ஆட்சியின்போது   நாட்டில் சுகாதாரத் துறையில் தன்நிறைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது திட்டமாகும். இதற்கு ஏற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம். வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்துத் தட்டுப்பாடுகளையும்,  அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கான தட்டுப்பாடுகளையும் தற்போது நிவர்த்தி செய்து வருகின்றோம்.

   அரசினால் மருந்துப்  பொருட்களின் விலைகளும்  கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகளுக்குத் தேவையான கட்டிட  வசதிகளையும்,  வைத்தியக்  கருவிகளையும் வழங்கி வருகின்றோம்.தொற்றா நோயை முற்று முழுதாக  ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும் மறுபுறத்தில்  மேற்கொண்டு வருகின்றோம்.

   அந்த வகையில், திஹாரிய மத்திய மருந்தகத்தில் நிலவுகின்ற குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, இம்மருந்தகய்தை மிகவும்  தரம்மிக்க மருந்தகமாக மாற்றி அமைக்க,  நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். இதற்காக, இரண்டு கோடி 50 இலட்சம் ரூபா நிதியை வழங்கவுள்ளேன் என்றார்.

Post a Comment

0 Comments