ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 10 நாடுகளின் ஆதரவை கூட இம்முறை இலங்கையால் பெற முடியாத நிலை உருவாகியிருப்பதாக அறிய வருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு ஆதரவான 26 நாடுகள் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதாக ஜெனீவாவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தற்போது அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, லிச்சென்ஸ்டைன், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா, துருக்கி, இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 26 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் A/HRC/51/L.1 தீர்மான வரைவு ஒக்டோபர் 6ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த முன்மொழிவை உருவாக்கியுள்ளன.
இந்த பிரேரணையின் மூலம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் உட்பட பல விடயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Comments