அம்பாறை மாவட்ட தனி முஸ்லிம் நிர்வாக அலகை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மறுத்தமையால் அவரிடமிருந்து பிரிந்து சென்றதாக அறிக்கை விடும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் அதற்கான உறுதிமொழியை மைத்திரி, சந்திரிகா, ரணில் கூட்டணியிடம் பெற்றுக்
கொண்டா பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்தது என முன்னாள் பிரதியமைச்சர் சேகு
இஸ்ஸதீன் கேள்வி யெழுப்பியுள்ளார்.
பொது எதிரணி கூட்டணியினால் அத்தகையதொரு உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தால் அதனை மு.கா.
தேர்தலுக்கு முன்பாக பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன்
எதிர்காலத்தில் பொது எதிரணியினால் முஸ்லிம் சமூகத்திற்கு எத்தகைய நன்மைகள்
கிடைக்கும் என்பதையும் மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்.
இதனை விடுத்து மு.கா. மைத்திரிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் அது முடிவில் ஆபத்திலேயே முடிவடையும்
எனவும் சேகு இஸ்ஸத்தீன் தெரிவித்தார். கரையோர மாவட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே
கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் தலைவர்கள் பொது
எதிரணியில் இணைந்து கொண்டிருப்பதால் மு.கா.வின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற
வாய்ப்பில்லை. அதனால் மு.கா. அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருந்து
சமூகத்திற்காக இன்னும் பலவற்றைச் சாதித்திருக்கலாம்.
ஆனால் மு.கா.தலைமை எடுத்த
அவசர முடிவினால் இனவாதக் கும்பலினால் சூழப்பட்டுள்ள பொது எதிரணியினுள் முஸ்லிம்
சமூகம் சிக்கிக்கொள்ள நேரிட்டுள்ளது. எனினும் முஸ்லிம்கள் தமது விவேகத்தினால் எமது
சமூகத்திற்கு நன்மைகளை செய்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி
செய்ய வேண்டும் எனவும் அவர் கேடுக்கொண்டார்.

0 Comments