அமெரிக்காவுக்கு தப்பியோடி தலைமறைவாகியுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அங்கிருந்து வியட்நாமுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் இப்போது அவர் எங்கு உள்ளார் என எவருக்குமே தெரியாதிருப்பதாகவும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக லலித் திஸாநாயக்க எம்.பி. தனது கேள்வியில் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வெளிநாட்டவரென்றும் மேற்சொல்லப்பட்ட நபருக்கு இலங்கையில் பிரஜாவுரிமை உள்ளதா என்றும் ஆம் எனில் அவர் இலங்கைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்ட திகதி எதுவென்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பதவி வகிக்கும் தகுதி அவருக்கு உள்ளதா என்றும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு இலங்கை பிரஜாவுரிமை இல்லை. அதைப் பெற்றுக்கொள்ள அவர் எதிர்பார்த்திருக்கின்றார்.
மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகிப்பதற்கு இவருக்கு கல்வியறிவும் தகுதியும் உள்ளது.தற்போது சிங்கப்பூர் பிரஜையாகவுள்ள அவர் ஒரு கால கட்டத்தில் இலங்கை பிரஜையாக இருந்தார்.
மத்திய வங்கியில் பல காலம் பதவி வகித்தார். தற்போது இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். அமெரிக்கப் பிரஜையான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எடுத்த கடன்களை செலுத்த நாம் பெரும் சிரமப்படுகின்றோம்.
அது மட்டுமல்ல நாட்டு மக்களின் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தற்போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அவர் இன்று எங்கிருக்கின்றார் எனத் தேடிக்கொள்ள முடியாதுள்ளது. அமெரிக்காவில் இருப்பதாக கூறினார்கள். இன்று அங்கும் இல்லையாம். வியட்நாமுக்கு சென்று விட்டாராம். நாம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை. ஆனால் கொள்ளையடித்தவர்களை தப்பிக்க விடமாட்டோம். கொள்ளையடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம்.

0 Comments