Ticker

6/recent/ticker-posts

'சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன்' 82 மணி நேரத்துக்கு பின்பு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் உருக்கமான பேட்டி

நேபாள நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 82 மணி நேரத்துக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்தபோது அவர் தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார்.  இமயமலையில் அமைந்து உள்ள நேபாளம் நாட்டை கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு பூகம்பம் புரட்டிபோட்டு உள்ளது. பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்கு சிக்கி சுமார் 5000-த்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். நேபாளத்தின் தலைநகரான காத்மண்டு உருகுலைந்து உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.


இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட உலகநாடுகள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காட்மாண்டு நகரில் 4-வது நாளாக மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.  காட்டுமாண்டு நகரில் 7 மாடி ஓட்டல் ஒன்றின் இடிபாடுகளை பிரான்ஸ் நாட்டின் மீட்பு குழுவினர் அகற்றிக் கொண்டிருந்தபோது நேபாள மொழியில் உதவி உதவி என்று ஒருவர் குரல் கொடுப்பது அவர்களுக்கு கேட்டது.   இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு குழுவினர் இயந்திரங்கள் உதவியுடன் அகலமாக துளையிட்டனர். பின்னர் அந்த துளை வழியாக பிராண வாயுவை அவருக்கு கிடைக்கச் செய்தனர்.

பல மணி நேரபோராட்டத்துக்கு பின்பு அவரைச் சுற்றியிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது அந்த இடத்தில் சிலர் பிணமாகவும் கிடந்தனர். அவர்களுக்கு இடையில் சிக்கி காயங்களுடன் உதவி கேட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பிரான்ஸ் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவியும் அளித்தனர்.   அப்போது, மீட்கப்பட்டவரின் பெயர் ரிஷிகானல் (வயது 28) என்பது தெரிய வந்தது. 82 மணி நேரத்துக்கு பின்பு அவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.

உயிர்பிழைத்தவர் அளித்த பேட்டியில், ஹோட்டலில் 2-வது மாடியில் தங்கியிருந்தேன். திடீரென நில நடுக்கம் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் என்றோ, அதற்குள் சிக்கிக் கொள்வோம் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சில நொடிகளில் நடந்துவிட்டது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியபோது நாக்கு வறண்டு போனது. உதடுகளில் வெடிப்பு விழுந்தது. நகங்கள் எல்லாம் வெள்ளை நிறமாக மாறிவிட்டன.

இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களில் இருந்து துர்நாற்றமும் வீசியது. அதை தாங்கிக் கொள்வதே எனக்கு பெரும் சவாலாக இருந்தது. உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை அறவே போய்விட்டது. தொடர்ந்து நாக்கு வறட்சி காரணமாக குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் குடிநீருக்கு எங்கே போவது?...எனவே வேறு என்ன செய்வதென்று தெரியாமல் எனது சிறுநீரையே பிடித்து குடித்தேன். 

இந்த 3 நாட்களிலும் தாகம் ஏற்பட்டபோதெல்லாம் எனது சிறுநீர்தான் நான் உயிர் வாழ பேருதவியாக இருந்தது. தெய்வாதீனமாக பிரான்ஸ் மீட்பு குழுவினர் என்னை உயிருடன் காப்பாற்றிவிட்டனர். அவர்களை என்வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். என்று கூறினார்.

3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட ரிஷகானலுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து அவர் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இங்கு இவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் அகிலேஷ் ஸ்ரீரேஸ்தா கூறும்போது, “இந்த இளைஞரிடம் இருந்த மன உறுதிதான் அவருடைய உயிரைக் காப்பாற்றி இருக்கிறது“ என்று பாராட்டினார். 

Post a Comment

0 Comments