இந்தோனேஷிய நீதிமன்றத்தால் போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டுபேரின் மரணதண்டனையும் செவ்வாய்க்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும்படி சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, மத்திய ஜாவா தீவில் இருக்கும் சிறைக்குள் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பிறகு (புதன்கிழமை துவங்கிய சமயம்) இவர்களின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்கிற பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட எட்டு ஆண்கள் ஆஸ்திரேலியா, பிரேசில், நைஜீரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள்.
தனது குடிமக்களான இருவர் மரணதண்டனையில் கொல்லப்பட்டால் அதற்கான எதிர்வினைகளுக்கு இந்தோனேஷியா முகம் கொடுக்கவேண்டி வரும் என்று ஆஸ்திரேலியா எச்சரித்திருந்தது. ஆனால் குற்றவாளிகளை தண்டித்து தடுப்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்திருக்கிறது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
1. மயூரன் சுகுமாரன் : 34 வயதுடைய அவுஸ்திரேலியப் பிரஜை. இவர் இலங்கை வம்சாவளித் தமிழர். சிட்னியில் பெற்றோருடன் வசித்து வந்தவர். 2005ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் வரையும் திறமைகளை வளர்த்துக் கொண்ட மயூரனின் ஓவியங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தன.
2. அன்ட்ரூ சான்: 31 வயதுடைய அவுஸ்திரேலியப் பிரஜை. சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். போதைப்பொருள் வைத்திருக்காவிட்டாலும், அதனைக் கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக மயூரனுடன் கைது செய்யப்பட்டார். சிறை வாழ்க்கை தம்மை மாற்றிய நிலையில், மதப் போதகராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டவர். திருமணத்திற்கு முந்தைய நாள் தமது காதலியைக் கரம்பற்றினார்.
3. மேரி ஜேன் வெலோசோ: 30 வயதுடைய பிலிப்பைன்ஸ் பெண்மணி. 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்பவராக சித்தரிக்கப்பட்டவர். இவரது வறுமை ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்க வைத்ததென நண்பர்கள் கூறுகிறார்கள். மேரிக்கு 12 மற்றும் 6 வயதில் இரு மகன்மார் உள்ளனர். இவரது தண்டனை கடைசி நிமிடத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
4. மார்ட்டின் அன்டர்சன்: 50 வயதான நைஜீரியப் பிரஜை. போலி கடவுச் சீட்டில் இந்தோனேஷியா சென்றவர். 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
5. ரஹீம் சலாமி: 50 வயதானவர். இவரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர். பாங்கொக்கில் நிர்க்கதியாக வாழ்ந்தவர். இந்தோனேஷியாவிற்கு கொஞ்சம் ஆடைகளை கொண்டு சென்றால், 400 டொலர்கள் தருவேன் என்று கூறிய புதிய நண்பனை நம்பி ஏமாந்தவர். எனினும், ஆடைகளுக்குள் போதைப்பொருள் இருந்ததைத் தாம் அறிவேனென அவர் கூறியிருந்தார்.
6. சில்வெஸ்டர் வொலிசே: 47 வயதானவர். நைஜீரியப் பிரஜை. 2002 இல் கைதாகியிருந்தார். இந்தோனேஷியாவிற்குள் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர். இவரது வழக்கு விசாரணையில் மொழிபெயர்ப்பாளரின் உதவி வழங்கப்படவில்லையென மனைவி கூறியிருந்தார்.
7. ஒக்வூடிலி ஒயடான்ஸே: இவருக்கு 41 வயதான நைஜீரியப் பிரஜை. தாம் வேலை செய்த ஆடை தயாரிப்பகம் மூடப்பட்டதை அடுத்து போதைப் பொருள் கடத்தல் காசு தரும் என நம்பியவர். 2002 இல் கைது செய்யப்பட்டிருந்தார்.
8. ரொட்ரிகோ குலார்தே: பிறேசில் நாட்டவர். செல்வம் கொழிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் விசாரணைகளில் ஆஜராக பொருத்தமற்றவர் என்று சட்டத்தரணிகள் வாதிட்டார்கள். ரொட்ரிக்கோவிற்கு ஷிஸோப்ரீனியா என்ற மனப்பிறழ்வு நோய் இருந்ததாக சோதனைகளில் கண்டறியப்பட்டது.
9. செய்னல் அபிதீன்: இவர் இந்தோனேஷியர். 50 வயது. 2001 இல் கைதானவர். தம்மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து நிராகரித்து வருபவர். உண்மையான சூத்திரதாரிகள் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலை பெற்றுள்ளதாக சாடுகிறார்.
10. செர்கி அட்லூயி பிரான்ஸைச் சேர்ந்தவர். போதையூட்டும் வில்லைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தொழிற்சாலையில் வேலை செய்தபோது கைது செய்யப்பட்டிருந்தார். தாம் வேல்டிங் பணியாளராக வேலை செய்ததாகவும் தொழிற்சாலையின் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி தாம் அறிந்திருக்கவில்லை எனவும் இவர் கூறுகிறார். செர்கியும் மரணதண்டனை நிச்சயிக்கப்பட்ட கைதியாவார். மேன்முறையீட்டு மனுவிலுள்ள சிக்கல் காரணமாக தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

0 Comments